Friday, February 13, 2015

என் முதுகில் மட்டைத் தேங்காய் விழுந்த கதை.

பெரியகுளத்தில் அநேகமாக எல்லா வீட்டின் கொல்லைப் புறங்களிலும்
தென்னை மரங்கள் இருக்கும். தேங்காய்கள் பறிக்க அடிக்கடி மரமேறிகள்
வருவார்கள்.அப்படி வந்தால்,'தேங்காய் பறிக்க வந்திருக்கேன்,
கொஞ்ச நேரம் பின் பக்கம் வராதீர்கள்' என்று தகவல், 
சொல்லி விட்டுத்தான் பறிப்பார்கள். இரண்டு பக்க வீடுகளுக்கும் சொல்வார்கள்.
எனக்கு இந்த  விபரம்  தெரியாது.

காலை வேளை எட்டு  மணி இருக்கும்.வீட்டின் உள்ளே எல்லாரும்    
டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.என் ஓர்ப்படி ஊரில் இல்லை.   
அதனால் என் மாமியார் எல்லாருக்கும் டிபன் பரிமாறிக் கொண்டு இருந்தார். 
நான் குழாயடியில் குனிந்து பாத்திரம் அலம்பிக் கொண்டிருந்தேன்.  

அப்போது திடீரென்று என் முதுகில் பெரிய மட்டைத்தேங்காய் டமால்   
என்ற சத்தத்துடன் விழுந்தது. 'ஓ'என்று அலறி விட்டேன். உள்ளே  இருந்து 
எல்லாரும் என்ன? என்ன?" என்று  ஓடிவந்தார்கள். என் பக்கத்தில் 
மட்டைத்தேங்காயை பார்த்த உடன் பயந்து விட்டார்கள். 

என் மாமியார் உடனே என் பக்கம் வந்து என் கையை  பிடித்து 
மெதுவாக நிற்க வைத்தார்.என்னால் நிமிர்ந்து நிற்கவே முடியவில்லை.
அந்த காலத்தில் நினைத்த நேரம் படுக்கையில் போய் படுக்கக்கூடாது.
முதலில் மடி,அடுத்து மரியாதை.  

அதனால் சமையலறைக்கு  எதிரே சற்றுத் தள்ளி உள்ள 
சாமான் உள் கூட்டிச் சென்றார்கள். சாமான்கள் உள் என்று பெயர்தான். 
அந்த  உள் ஜன்னலில்லாத காற்றே வராத இருட்டு அறை. 
கூடத்தில் உள்ள வெளிச்சம் அங்கே நன்னா வருமே என்பார் என்னுடைய மாமியார். 
அந்த உள்ளில் தேளெல்லாம் இருக்கும் என்று  நான் முடிந்த மட்டும் அங்கே     போகமாட்டேன். அங்கேயே என்னை அந்த வாசல் படியிலேயே தலை வைத்து  படுத்துக்கோ,இதோ வரேன் என்று போய் விட்டார்.     

எனக்கு தாங்க முடியாத வலி. அரை மணி நேரத்தில் ஒரு கிண்ணம் நிறைய செக்கச்   செவேல் என்று எதையோ துவையல் மாதிரி எடுத்து வந்தார்.என்னை திரும்பி குப்புற படுத்துக்கோ என்றார்.
முதுகு முழுக்க ஜில்லென்று அதை கனமாக அடை மாதிரி தட்டினார்.அப்படியே அசங்காம தூங்கு என்று  சொல்லிவிட்டு போய்விட்டார்.
முதுகில் அந்த பத்து உள்ளுக்குள் விர்ரென்று   இழுக்கிறது.நான் அப்படியே தூங்கி   விட்டேன்.

 மூணு மணி வாக்கில் வந்து சாப்பிடுவதற்கு எழுப்பினார்.ஸ்பெஷலாக ஏதோ மிளகு திப்பிலி என்று  போட்டு சூடாக ரசம் சாதம்  பண்ணி எனக்கு சாதம் போட்டார். நீ பாட்டுக்கு சாதாரணமாக இரு என்றார். எனக்கு முதுகெல்லாம் பிசுக்கென்று ஜில்லென்று ஒட்டிக்கிறதேஎன்றேன்.அது அப்படித்தான் இருக்கும். நாளை காலை வரை என்றார்.அன்று முழுக்க அவஸ்தைதான்.

மறு நாள் காலை நாலு மணிக்குஎழுப்பிவிட்டார்.வா,வெந்நீர் போட்டிருக்கேன்.சூடா விட்டு  முதுகை உருவி  விடறேன்.பத்தெல்லாம்  போயிடும்.வலியே இல்லாம சரியாகிவிடும் என்று சொல்லி துவைக்கும் கல்லில் என்னை உட்கார்த்தி சுடச்சுட வெந்நீர் விட்டு     முதுகை உருவி விட்டு குளிப்பாட்டினார்.குளித்த உடன் ஏதோ ஒரு லேகியமும்    கொடுத்தார். எனக்கு தேங்காய் விழுந்ததே மறந்து விட்டது. முதுகில் போட்டது  என்ன என்று கேட்டேன். சொன்னால் மருந்து பலிக்காது  என்றார்.

ரொம்ப வருஷம் ஆன பிறகு அந்த மருந்து என்ன என்று தெரிந்தது. 
அது என்ன தெரியுமா?
மணலில்லாத சுத்தமான செம்மண். கருப்பு முழு உளுந்து, புளி,மூன்றையும் அம்மியில் மைபோல் அரைத்து அடி பட்ட இடத்தில் மாவுக்கட்டு   போல போட்டிருக்கிறார்.அதை அம்மியில் அறைப்பது எவ்வளவு கஷ்டம்?

ஒரு மட்டைத் தேங்காய் என் முதுகில் விழுந்து பட்ட அடியில், எனக்கு என் மாமியாருக்கு, என் மேல் உள்ள அன்பும் அக்கறையும் புரிந்தது. கூடவே அவர்களின் கை வைத்தியத்தின் திறமையையும் தெரிந்து கொண்டேன்.