ஒன்பது மணியாச்சே..இன்னும் ஏன் போஸ்டுமேன் வரக்காணும்
என்று அந்த காலத்தில், போஸ்ட்மேனை எதிர் பார்ப்பார்கள். அப்போதெல்லாம்,தபால் மூலமாகத்தான்
சகல விஷயங்களையும் அறிந்து கொள்ளமுடியும்.
தினமும் காலை,மதியம்,மாலை மூன்று வேளையிலும் தபால் வரும் .
விகடன்,கல்கி,சுதேசமித்திரன்,போன்ற பத்திரிகைகள்,
தபால் மூலமாக வரும். அந்த பத்திரிகைகள் வரும் நாட்களில்
தபாலை ஆவலுடன் எதிர்பார்ப்போம்.பரிட்சை ரிசல்ட்,
கார்டில் வரும். குழந்தைகள் டென்ஷனுடன் உள்ளுக்கும்
வாசலுக்குமாக நடந்து வண்ணமிருப்பார்கள் .
ஏம்மா ஓரு காலணா கார்டுலே ,
நாலுவரி நான் சௌக்யம்னு எழுதக்கூட நேரமில்லையா ?
என்று பெற்றோர்கள் கேட்பதுண்டு.
கார்டு காலணா,கவர் ஒண்ணரையணாதான்.
கடிதத்தை எழுத,
"முதலில் அன்புள்ள அம்மாவுக்கு.அநேக நமஸ்காரங்கள் "
என்று ஆரம்பிக்கும்.
அப்பா அண்ணா இந்த மாதிரி எல்லாருக்கும்
கடிதம் எழுதிமுடித்து கடைசியில் "தங்கள்அன்புள்ள" என்று முடியும் .
அன்புள்ள என்று. ..எழுதும்போதே நிஜமான ஆசை மனதில் எழும் .
அதை கடிதம் எழுதின பழக்கம் உள்ளவர்கள் அறிவார்கள்.
தவிர மணியாடர் அப்பவெல்லாம் பணம் அனுப்ப அதுதான் வழி. மத்யானம் ஒண்ணரை மணிவாக்கில், மணியாடர் வரும் .
பண்டிகை பருவங்களில் பெண்களுக்கு பிறந்த வீட்டிலிருந்து
பொங்கல், தீபாவளி இது மாதிரி விசேஷங்களுக்கு
அந்த மணியாடர், வரும் வரையிலும் இந்த பெண்களுக்கு
வேறு வேலையே ஓடாது. ஐந்தோ. ஆயிரமோ எது வானாலும்
பிறந்த வீட்டுப்பணம் வந்த,பெருமை பொங்க இருப்பார்கள்.
அப்போதெல்லாம் அவசர செய்திகளுக்கு தந்திதான்.
காலேஜுக்கு பீஸ் கட்டுவது,அப்பாவுக்கு ,பிள்ளைகள் பணம் அனுப்புவது , சகலத்துக்கும், அதுதான் வழி.
மணியாடர் பாரத்தில் இருக்கும் இத்துனூண்டு இடத்தில்
நுணிக்கி நுணிக்கி ஒருமூட்டை சமாசாரங்கள் எழுதி இருப்பார்கள்.
அவசரத்துக்கு தந்தி மணியார்டர் என்று வேறு இருந்தது .
இரவு பகல் என்று எந்த நேரமும் வரும் .
தந்தி என்ற உடன்,அதுவும் இரவு நேரம் தந்தி வந்தால்.
என்னவோ ஏதோ என்று பயம் உண்டாகும்.
போஸ்ட்மேன்,மணியாடர்கொண்டு வருபவர் எல்லாம்
ரொம்ப பழக்கமானவர்களாக சிநேகிதமாக இருப்பார்கள்.
எல்லாரும் எல்லாருடனும் சகஜமாக பேச பழக இருப்பார்கள்.
இப்பவெல்லாம் ஆளுக்கு ஒரு கைபேசி. ஐந்து வயது குழந்தை
உள்பட வீட்டில் உள்ளவர்களுடன் பேசவே நேரமில்லாமல் கைபேசியுடன்,சதாபேசியபடி இருக்கிறாகள்.
இதெல்லாம் இப்போது அவசியமானதாக ஆகிவிட்டது .
அப்பவெல்லாம் . தினமும் யாரிடமிருந்தாவது , கடிதம் வந்து கொண்டிருக்கும்.வந்த,
கடிதங்களை வீட்டில் உள்ள அத்தனை பேரும் ஏதோ கதைபோல் படித்து,
அதைப்பற்றிய விமர்சனம் வேறு நடக்கும்.பதிலும் உடன் எழுதிவிடுவோம்.
எழுதியதையும்,எல்லாரும் படித்த பின்புதான்
போஸ்ட் பண்ணவிடுவார்கள்.தபால் என்பது ,அவ்வளவு ஸ்வாரஸ்யமானவிஷயம்.கடிதம்.
எழுதும்போது ரொம்ப ஆர்வமாக எழுதுவோம் . மனதில் உள்ளதையெல்லாம்,
கடிதம் எழுதும்போது மறைக்க வராது,கை தானாகவேmஎழுதிவிடும்.
நம் உள்ளக்கிடக்கைகளை,கடிதம் மூலமாக எழுதி தெரிவிப்பதுபோல்
கைபேசியில் பேச முடியாது மனது தடுக்கும். எழுதும்போது,
மனது விசாலமாக இருக்கும்.நிறைய கற்பனைகள் ஊறும் அழகாக விஷயத்தை,
சொல்ல முடியும் .இதுதான் கடிதம் எழுதுவதிலுள்ள சௌகர்யம்.
நான் நிறைய கடிதங்கள். பக்கம் பக்கமாக எழுதியிருக்கேன்.
எந்த ஊருக்கு. போனாலும் அதுபற்றி அங்கு தடந்த ஸ்வாரஸயமான விஷயங்கள்,
என்றல்லாம்எழுதுவேன் . என் மாமாஅந்த காலத்தில் கொஞ்ச நாள்
ஊட்டியில் மின்சார இலாகாவில் வேலை பார்த்தார். அப்போது வாரம்இரண்டு ,
மூன்று கடிதம் எழுதுவார்.அந்த கடித்தில்
ஊட்டியைப்பற்றி அவ்வளவு அழகாக. வர்ணித்து எழதுவார்
கையெழுத்து ஒரே மாதிரி அச்சுக்கோத்தாப்போல இருக்கும்.
அந்த கடிதங்களை எல்லாம், இப்போது சேர்த்து படித்தால்.
கதைமாதிரி இருக்கும். அதையெல்லாம் அருமை தெரியாமல்
தொலைத்து விட்டோம்.இப்பொழது கடிதங்கள் எழுதுவதே
தொலைந்து விட்டது .இது மாதிரி நிறைய
பழைய விஷயங்கள்,நிறைய வார்த்தைகள்,எல்லாம்
இப்போது இல்லை .நினைவுகள் நிறைய வருகிறது.
- விமலா. பாட்டி.