Tuesday, January 13, 2015

மதுரை 60 வருடங்ளுக்கு முன்பு



ஸ்வாமி புறப்பாடு


மதுரையில் ஸ்வாமி புறப்படும் முன்பு முதலில் கோவில்மாடு, முதுகில்  முரசுடன் வரும்.
டம் டம் என்று சத்தம் கேட்ட உடன் ‘வாசலில் சாமிவரப்போறது’  என்று எல்லாரும் சுறுசுறுப்பாக  வேலைகளை முடிப்போம்.
அரை மணிகழித்து வேட்டுசத்தம் வரும். சிÈ¢து நேரத்தில் குட்டிப்பல்லாக்கில் சின்ன பிள்ளையார் வருவார்.
அவர் எப்போதும் பட்டு வேஷ்டியுடன் அலங்காரத்துடனயே    இருப்பார்.
அவரை, அப்படியே கொண்டு வரவேண்டியதுதான். அடுத்து    முருகன் தங்ககுதிரை வாகனத்தில் ÅÕÅ¡÷.
பிள்ளையார் முருகனுக்கு  பின்னால் மெதுவாக பிரியாவிடையும் சுந்தரேசரும் வருவார்கள்.
அதுவும் இதேபோல் ரொம்ப அழகாக இருக்கும்.
அப்படி வரும்போது  அந்த மாலையுடன் இருக்கும் பொம்மைகள் சரியாக வந்து நின்றவுடன் பொம்மையை  கீழே இறக்குவார்கள்.
அது அப்படியும் இப்படியும்,  ஆடிக்கொண்டே, கையில் மாலையுடன் கீழே இறங்கி பிரியாவிடைக்கும் சுந்தரேசருக்கும் மாலைகளை  போட்டுவிட்டு ஆடிக்கொண்டே மேலே போய்விடும்.
திரும்பவும் தனி மீனாட்சி  வரும்போது, அதேபோல மீனாட்சிக்கும்    மாலை போடும். இதை பார்க்கவே  தெருவின் இரண்டு சாரியிலும்    கூட்டம், பதினோருமணி அளவிலும் நிற்கும். கண்ணாடியில் மீனாட்சி ரொம்ப அழகாக தெரிவாள்.
அப்பொழுதுதான் பூப்பல்லாக்கு பார்த்த உணர்வு உண்டாகும் .
பிறகு ஆவணிமாதõ புட்டுத்திருநாளென்றால் மாணிக்க வாசகர்
வெள்ளிக்குதிரையில் வருவார். சித்திரை  திருநாளில் அவர்  வரமாட்டார்.
இதேபோல அழகரும் தல்லாகுளத்திலிருந்து புஷ்பபல்லாக்கில் வண்டியூர் போவார்.


மீனாட்சி கோவில்

 
மதுரையில் அந்தகாலத்தில் கோவிலை சுத்தி நிறைய வீடுகள்    இருக்கும். வடக்குமாசி மேல மாசிவீதிகளில் எல்லாம் நிறைய சந்தைகளும்  இருக்கும்.
கோவில் பக்கத்திலுள்ள சித்திரை வீதிகளில் கடைகளுக்கு நடுவிலும் வீடுகள் இருக்கும். கோவிலை சுத்தியுள்ள வீடுகள்  அநேகமாக ஒண்டு குடித்தனமாக  இருக்கும். சில தனி  தனி  வீடுகளும் உண்டு. நிறைய ஸ்டோர்களும் இருக்கும். ஸ்டோர் என்றால் கடைகள் இல்லை. அதாவது, ரெண்டு பக்கமும் வரிசையாக ஒரேமாதிரி பத்து வீடுகள்  இருக்கும். நடுவில் வராண்டா மாதிரி நடைபாதை, மறுபுறமும் எல்லை
இருக்கும்.  எல்லாருக்கும் பொதுவாக கீழே இருப்பவர்களுக்கு தனியாகவும் மாடியில் இருப்பவர்களுக்கு தனியாகவும், லெட்ரின்கள், பாத்ரூமகள் இருக்கும்.
நான் எழுதுவதெல்லாம் அறுபது வருடத்திற்கு முந்தின மதுரை. கோவிலை சுத்தியுள்ள இடத்தை எல்லாம்  Town என்பார்கள்
Townஹால் ரோடே நீளமாக இருக்கும்.
மதுரையில் கோவிலை சுத்தியுள்ள வீடுகளில் இருப்பவர்கள் எல்லோருமே வீட்டு வேலைகளில் ஒன்றாக கோவிலுக்கு தினமும் வருவதை வைத்துக்கொண்டிருப்பார்கள். எல்லாருமே கட்டாயம். ரெண்டுவேளையும் வருபவர்கள்தான்   முடிந்த போதெல்லாம்  அர்த்தஜாம பூஜைக்கும் வருவார்கள்.
இந்த காலம் மாதிரி டீவி கிடையாது. நிறைய வீடுகளில்    ரேடியோகூட இருக்காது.
அர்த்தஜாமத்தில், மீனாட்சி சந்நிதியில் இருக்கும் பள்ளி அறையில்  வெண்கலத்தால் இரு பக்கமும்  பெரிதாக, உயரமாக இரண்டு பாவை  விளக்குகள் இருக்கும்.
மூன்று பித்தளைப்படிகள் இருக்கும். பள்ளியறை கதவு முழுவதும் பித்தளை தகடு. கதவு திறந்தவுடன் உள்ளே சின்ன. தொட்டில் போல்  ஊஞ்சல். வெண்கல கம்பியில் மாட்டி இருக்கும் சுந்தரேச்வரரையும்  மீனாட்சியையும், ஊஞ்சலில் வைத்து லேசாக ஆட்டுவார்கள். வெளியில் வீணை வாசிப்பார்கள், தேவாரம்பாடி  கற்கண்டு போட்டு பால் நைவேத்யம் பண்ணி தீபாராதனை காட்டுவார்கள். எல்லாருக்கும் ப்ரசாதம் தருவார்கள்.
தினமும் மீனாட்சி  கோவிலுக்கு கட்டாயம் போகணும்  என்பதற்காகவே நிறைய பேர்கள் விலைசுற்றியே குடியிருப்பார்கள். நிறைய சௌகரிய குறைகளையும் பொறுத்துக்கொண்டு நாங்களும் அப்படித்தான் இருந்தோம். சாமி சந்நதியிலிருந்து வீரவசந்தமண்டபம் வழியாகவந்தால், மங்கயற்கரசி மண்டபம்.
அங்கு ஆயிரங்கால் மண்டபம் இருக்கும்.
அந்த மண்டபத்தை அந்த காலத்தில் எல்லாரும் உள்ளே போய் பார்க்கலாம். மண்டபத்தின் வெளி தூண்களிலேயே பெரிய குதிரை வீரர்களின் சிலைகள்  இருக்கும். குதிரை வீரர்களின் கைகளில் கயறு, குச்சி எல்லாமே தத்ரூபமாக இருக்கும். குறவன் குறத்தி கையில்  ஓலைக்கூடை இருக்கும். மண்டபத்தின் உள்ளேயும் எல்லா தூண்களிலும் அற்புதமான சிலைகள் இருக்கும்.


மண்டபத்தின் நடுவில், நடராஜர் சிலை இருக்கும்.
அந்தசிலைக்கு மார்கழி மாதம் அபிஷேகம் பூஜை எல்லாம் நடக்கும். மார்கழி மாதம்  திருவாதிரை அன்று, நடரஜரைப் பார்க்க, காலை ஐந்து மணிக்குள்  எல்லாரும் வந்து விடுவார்கள். ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து  ராஜகோபுரம் வழியாக. வெளியே வந்தால் எதிரே ஏழுகடல்  இருக்கும்.

அதற்கு மதுரையில் ஒரு கதை சொல்வார்கள்.
மீனாட்சியின் அப்பா, மலையத்வஜ பாண்டியராஜன் ஸ்வர்க்கம் அடைந்தவுடன்  மீனாட்சியின் அம்மா, காஞ்சனமாலை மிகுந்த வருத்தமடைந்து  இருந்தபோது  சுந்தரேசர் அவரிடம் “உங்களுக்கு
இப்போது என்னவேண்டும்”  என்று கேட்ட்டாராம். 
காஞ்சனமாலை “ஏழு கடலிலும் ஸ்நானம் செய்யுணும்னுதான் எனக்கு ஆசை”, என்றார். உடனே சுந்தரேசர், அந்த குளத்தில், ஏழு கடலும் பொங்கி வரும்படி அனுக்ரஹம் பண்ணினாராம்.
காஞ்சனமாலை, ஏழுகடல் குளத்தில் இறங்கி ஸ்நானம் பண்ணிய  உடன்  மலையத்வஜ பாண்டியன் மேலுலகத்திலிருந்து ரதத்தில் வந்து, காஞ்சனமாலையை, ஸ்வர்க்கத்திற்கு அழைத்துப்போய் விட்டதாக  சொல்வார்கள்.

அப்போதெல்லாம் அந்த குளத்தில்  தண்ணீர் இருந்தது   இப்போது ஒரே குப்பையாக இருக்கு. “காஞ்சனமாலைக்கு மாப்பிள்ளை வாய்த்தாற்போல் யாருக்கு வாய்க்கும்” என்று மதுரையில் சொல்வார்கள்.

அஷ்ட லட்சுமி. மண்டபம் தாண்டி புது மண்டபம். இருக்கும்.
இதை வசந்த மண்டபம் என்றும் சொல்வார்கள். இது திருமலை நாயக்கரால்  கட்டப்பட்டது. என்றும் சொல்வார்கள்
இருபத்துரெண்டு வருடமாக கட்டியதாக சொல்வார்கள். அந்த மண்டபத்தின் நடுவில், மார்பிளால். மீனாட்சிக்கும் சொக்கருக்கும் ஆசனம் அமைந்து உள்ளது.
அங்குதான் வசந்தோற்சவத்தின்போது வைகாசித்திருநாள் நடக்கும்.அந்த மையமண்டபத்தைச்சுற்றி. நாலு புறமும் நிறைய கடைகள் இருக்கும்.
ஒருபக்கம். முழுதும் பித்தளை பாத்திரங்கள் வெண்கலபாத்திரங்கள்.  இரும்பு தோசைக்கல், சேவைநாழி, என்று சகல  சாமான்களும் கிடைக்கும். பாதை மிகவும் குறுகலாக இருக்கும்.
இன்னொருபக்கம்  வளையல்கள். கல் பதித்த கவரிங் நகைகள். இப்படி நிறைய இருக்கும். ஒருபக்கம்  தைப்பதற்கு வேண்டிய தையல் சாமான்கள் மட்டும் இருக்கும்.
ஒருபக்கம் தையல்காரர்கள் நிறைய இருப்பார்கள். தேருக்கு வேண்டிய தொம்பை முதலிய அலங்கார துணிகளை தைத்துக் கொண்டிருப்பார்கள் இந்த மண்டபத்தூண்களில் மதுரையை ஆட்சி
செய்த விஸ்வநாத நாயக்கர், திருமலை நாயக்கர், அந்த ராஜாக்களுடைய ராணிகள், பெரிய காளி சிலை, நிறைய யாளிகள் குதிரை வீரர்கள், அவர்கள் தோளில் குதிரைகள் தன்  குளம்பை வைத்துக்கொண்டு கம்பீரமாக நிற்கும் சிலைகள் இருக்கும்.


மதுரையை சுற்றிஉள்ள மற்ற கோவில்கள்
 


மதுரையை சுற்றி நிறைய கோவில்கள் இருக்கும். அதில் சுந்தர ராஜபெருமாள்கோவில் ரொம்ப ப்ரசித்தம். அந்த கோவிலில்தான் பெரியாழ்வாருக்கு சுந்தர் ராஜபெருமாள், கருடவாஹனத்தில்  காட்சி கொடுத்தார்.
அந்த சமயம் தான் பெரியாழ்வாரை பாண்டிய ராஜா யானையில்  உட்கார்த்தி வைத்து பூர்ணகும்ப மரியாதையுடன் அழைத்து வந்தான்.

அப்போதுதான் கோவிலுக்குள்அவருக்கு பெருமாள் தரிசனம் கிடைத்தது. அப்போது அவர் 
 “பல்லாண்டுபல்லாண்டு.
பல்லாயிரத்தாண்டு
பலகோடிநூறாயிரமாண்டு
திண்தோள் மணிவண்ணாநின்
சேவடிசெவ்விதிருக்காப்பு”
என்ற திருவாய் மொழியை பாடினார்.

இம்மையிலும் நன்மைதருவார் கோவிலில் உள்ள பைரவர்  ரொம்ப சக்தியுள்ளது, என்பார்கள்.
பல வருடங்களுக்கு முன்பு, இன்னும் இரண்டு நாளில் உலகம் அழியப்போகிறது, என்ற செய்திபரவி மதுரையே பயந்து நடுங்கியது. இப்பல்லாம் என்றால் எல்லாரும் சிரித்துக்கொண்டு போகிறார்கள் அப்போது இவ்வளவு விவரம் இல்லாத மக்களாக அப்பாவிகளாக இருந்தார்கள். அதனால் ரொம்ப பயந்தார்கள். அப்போது மஹா பெரியவர்சந்திர சேகர ஸ்வாமிகள் “எல்லோரும் மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார்  கோவிலில் உள்ள நவக்ரஹத்தை தினமும் இரண்டு வேளையும் ஒன்பது தடவை ப்ரதக்ஷணம் பண்ணுங்கோ, ஒண்ணும் ஆகாது. எல்லாரும் க்ஷேமமாக இருப்பீர்கள்”. என்றார். உடனே மதுரையே நன்மைதருவார் கோவிலில் கூடிவிட்டது. ப்ராகாரம் கொள்ளாமல் கூட்டம்.
அதிலிருந்து அந்த கோவில் உலக ப்ரசித்தியாகிவிட்டது.
அப்போதுதான் “வேயுறு தோளி  பங்கன் விடமுண்ட கண்டன்
மிக நல்ல வீணைதடவி” என்ற தேவாரத்தை  எல்லாரையும் பாராயணம் பண்ண சொன்னார். அப்போது அந்த தேவாரப்பாட்டு, அத்தனை  பேருக்கும் பாடமாயிற்று.

மதுரையை சுற்றி திருப்பறங்குன்றம் பழமுதிர்சோலை நரசிங்கம்  திருமோகூர், திருவாதவூர் இருக்கிறது.
மாணிக்கவாசகர்  பிறந்த ஊர் திருவாதவூர். அங்கே அவர் வாழ்ந்த அரண்மணை இருக்கிறது.  அதைப்பற்றி  சுமாராகத்தான்  என்னால்   எழுதமுடியும்.
அந்த திருவாதவூரில், கோவில் ரொம்ப பெரியது. எனக்கு தெரிந்து பலவருடங்களாக பெரிதாக இரண்டு மகிழமரங்கள் இருக்கிறது. பூவாக சொறிந்து கொண்டு, ரொம்பவும் பழமையான கோவில்களில்  அதுவும் ஒன்று.
மதுரையில் காலை வேளையில் எல்லோரும் அநேகமாக சுறுசுறுப்பாய்த்தான் இருப்பார்கள். காலை  நாலுமணியிலிருந்தே இருட்டும் வெளிச்சமுமாக  இருக்கும்.
பொழுது புலர்ந்தும் புலராமலும்   இருக்கும்போதே எல்லார் வீட்டு வாசலிலும் சடசட என்று  சாணிதெளிக்கும் சத்தமும் பெருக்கும் சத்தமும் கேட்கும்.
அழகழகாக வெள்ளைவெளேரென்று  கோலமும்  ஸ்ரத்தையாக போடுவார்கள்.
மாடும், கன்றுமாக பால் கறப்பதற்காக சில வீடுகளின் வாசல்களில்  கட்டி இருப்பார்கள்.அந்த காலை ரொம்ப அழகு.
அந்த காலத்தில், மதுரையில், குதிரை  வண்டியும் கைரிக்‌ஷாவும் தான்.


மதுரை அழகர்கோவிலை  மறந்து  விட்டேனே! அதை பற்றி பின்னர் எப்பொழுதாவது எழுதுகிறேன்.
 





மதுரை மாவடு


அங்கு கோவிலும் உசத்தி, மாவடுவும் உசத்தி. மதுரை அருகிலுள்ள பெரியகுளத்தின் பக்கத்திலுள்ள கும்பக்கரை  வடுவும் உசத்திதான்! மாவடு சீஸன் பங்குனிமாதம் ஆரம்பிக்கும்.
பங்குனிக்கு முன்பே மாவடு வர ஆரம்பித்துவிடும். மாவடு சீஸன் வந்து  விட்டால் மதுரை மக்களுக்கு சந்தோஷம் தாங்காது. மதுரையே    மணக்கும். மாவடு  விற்பனை மட்டும்  ஸ்பெஷல். காலை வேளை நாலு.   மணி வாக்கில் விடிந்தும் விடியாமலும் இருக்கும்போதே தெருமுக்கில்  ரெண்டு ஆண்கள், ரெண்டு பெண்கள் நின்று கொண்டு, “மாவடு. மாவடு” என்று பெரிசாய் சத்தம் கொடுப்பார்கள்.
வீட்டுக்குள் இருக்கும் மாமிகள், பதறி அடிச்சுண்டு கையோடு கூடைகள், பணம், எல்லாவற்றோடும்,  தூக்கம் கலைந்தும்  கலையாமலும் வந்து சூழ்ந்து கொள்வார்கள்.
சில கணவன்களும் வருவதுண்டு. ரெண்டு வித மாவடுக்களை வைத்துக்கொண்டு, அந்த நாலு பேறும் அப்படி ஒரு பேரம் பேசி எல்லாரையும் குழப்புவார்கள்.
அப்போல்லாம் படிதான். இப்பவும் தெருவில் விற்கும் மாவடுவிற்கு படிதான். ஐந்துபடிக்கு குறையாமல் வாங்கினாலதான் விலைபேச வருவாள். மாவடுவை  தொடக்கூடாது. தொட்டால்,”ஏ! தொடாதே! அது பவுனு! நா எடுத்து காமிக்கிரேன்” என்று கூறுவார்கள். “உடைத்து பாரு
மஞ்சநாரியே இருக்காது அத்தனையும் அருமையான வடு” என்று  என்னனமோ பேசி, எல்லாரையும் 5 படிக்கு குறையாமல் வாங்கும்படி பண்ணிவிடுவார்கள். விற்ற பிறகு ரொம்ப சிநேகிதமாக  பேசி  கதையளந்துவிட்டுப் போவார்கள். அவர்கள் போன உடன்
மழை பெய்து ஓய்ந்தாற்போல் இருக்கும். அப்போதெல்லாம்  வருடாவருடம் இதே கதைதான்.
 சிலபேர் தளவாய் அக்ரஹாரத்திற்கே காலை நாலுமணிக்கேபோய்
மாவடு லாரி வருவதற்கு காத்திருந்து கொஞ்சம் மலிவென்று வாங்கி வருவார்கள். எத்தனையோ காய்கள் ஊருகாய் போடுவதற்கு    இருக்கிறது. ஆனால் ஏன் இந்த மாவடு மட்டும் எல்லாரையும் பைத்தியமாக அடிக்கிறது என்று தெரியவில்லை.
எல்லாரும் நீங்க வடு போட்டாச்சா என்று கல்யாணமாச்சா என்று விசாரிப்பதுபோல் கேட்டுக்கொள்வார்கள். தளவாய் அகரஹாரத்தில்தான் மொத்த காய்களும்
வரும். வாழைக்காயிலிருந்து பலாப்பழம் வரை சகலமும் அங்கு கிடைக்கும். இப்போதெல்லாம் சென்னையில் பழமுதிர்சோலையில் யார் வேணாலும் எப்படி வேணாலும் சிகப்பு காம்புவடுவை பொறுக்கி வாங்கலாம்.
வடு வாங்கும்போது சிவப்பு காம்பாக பார்த்து வாங்கணும். அதான் மலைவடு.
மதுரையில் காலை ஆறுமணிக்கெல்லாம், கீரையிலிருந்து வாழைப்பூ, வாழைத்தண்டு, இலை, வெற்றிலை. எல்லாம் சோழவந்தானிலிருந்து வரும். எல்லாம் தெருக்களில் விற்க வந்து விடும்.
 

மதுரை பாட்டுக்கச்சேரி


மதுரையில் மதுரைசேஷகோபாலன், அவனுடைய நண்பன் வன்மீகநாதன் இருவரும் மீனாட்சி கோவிலில் ஆடி வீதியைலிருக்கும் திருப்புகழ் மண்டபத்துக்கு திருப்புகழ் கற்றுக்கொள்ளவருவார்கள். ஆடி வீதியில். உட்கார்ந்து அவர்கள்பாடும் திருப்புகழை
கேட்போம்.
அப்பவே  அழகாக பாடுவான். ஆத்துக்கு வரும்போதெல்லாம் நண்பனோடு வருவான் திருப்புகழ். பாடுடா என்றால் உடனே நண்பனுடன் சேர்ந்து பாடுவான். அவர் இப்போது ப்ரபல பாடகர். மதுரை க்ருஷ்ணன், மதுரை மணிஅய்யர் எம் எஸ் சுப்பலெட்சுமி.  மதுரைசோமு, எல்லாரும் மதுரை தந்த செல்வங்கள்

அந்த காலத்தில் ஆடி வீதியில் மதுரைசோமு, க்ருபானந்த  வாரியார் புலவர்  கீரன் அவர்கள், சிவானந்த விஜயலட்சுமி, பத்து வயது வீணை காயத்திரி எல்லாரும் வந்து அடிக்கடி. கச்சேரி பண்ணுவார்கள்.
ஆடி வீதியில் எல்லாரும் காத்தாட உட்கார்ந்து  சந்தோஷமாக கேட்போம். நல்ல கூட்டம் இருக்கும். காலை நீட்டிக்கொண்டு ஜாலியாக, ஏனென்றால் பைசா செலவு கிடையாது!
இதெல்லாம் அறுபது ஆண்டுகளுக்கு முந்தைய கதையாகப்போனதை
கதையாக எழுதியுள்ளேன்.
நிறைய தவறுகள் இருக்கலாம்.
மதுரையைபற்றி எழுத எழத, நிறைய இருக்கு.  உங்களுக்கு  சிறிது ஓய்வு கொடுப்பதற்கு இத்துடன் நிறுத்திக்கொண்டுள்ளேன்.

2 comments:

  1. இனிமையான நினைவுகள் அம்மா...

    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அர்த்தஜாம பூஜை, மதுரை வீதிகள், மாவடு (அதென்ன விடியற்காலை...காபி கூட குடிக்காமல்?), சிவப்பு காம்புடன் மலை வடு...எல்லாம், திரும்பவும் அந்த காலத்திற்கு போய் வாழ மாட்டோமா என்ற என் ஏக்கத்தை அதிக படுத்திவிட்டீர்கள்...

    ReplyDelete